அண்ணாமலை முதல்வர் ஆவதெல்லாம் நடக்காத விஷயம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜனவரி 17) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்தநாள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அண்ணாமலையை முதலமைச்சராக்க ரஜினி விரும்பினார் என்று துக்ளக் குருமூர்த்தி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,
“குருமூர்த்தி பேசியதை நான் கேட்டேன். அவருடைய ஆசையை சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்த் அதுகுறித்து வெளிப்படையாக எங்கும் பேசவில்லை.
ரஜினி தன்னிடம் கூறியதாக துக்ளக் குருமூர்த்தி விழாவில் பேசியிருக்கிறார். அண்ணாமலை முதல்வர் ஆவதெல்லாம் இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம். தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்,
உலக அளவில் போற்றப்படுகிற தலைவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட தலைவருக்கு அண்ணாமலை வாழ்த்து சொல்வது நல்ல விஷயம் தான். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…