திருமண உறவுக்கு இணையான Live-in உறவில் வாழும் பெண்களை கொடுமைப்படுத்தினால் ஆண்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பெண்கள் வழக்குத் தொடர முடியும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தீர்த்தா என்ற பெண், கணவர் லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக சிவமொக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசாரும் டாக்டர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரி டாக்டர் லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “தீர்த்தாவுக்கும் தமக்கும் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெறவில்லை. Live-In உறவில்தான் இருவரும் வாழ்ந்தோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவானது, ”கணவர்” மற்றும் அவரது குடும்பத்தினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமையை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. Live-In உறவில் இருப்பவர்களை பற்றி குறிப்பிடவில்லை. ஆகையால் 498A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், “கணவர்” என்ற சொல் டெக்னிக்கல் வார்த்தை அல்ல; திருமணத்தைப் போல Live-In உறவுகளுக்கும் 498A பிரிவு பொருந்தும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக டாக்டர் லோகேஷ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், திருமணத்துக்கு இணையான Live- In உறவுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A என்பது பொருந்தும். இருவரும் ஒருமித்து திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தது நிரூபிக்கப்படும் நிலையில் கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் வன்கொடுமைகளில் இருந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A-ன் கீழ் பெண்கள் பாதுகாப்பு பெற முடியும்” என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
இதன் மூலம் Live-In உறவில் இருக்கும் பெண்களுக்கும் சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
