தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தும் பொருட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, அந்தப் பதவியில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். ஆனால் ஆளும் கட்சியான திமுக, சந்தீப் மிட்டல் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு ஆதரவானவர் என்றும், அவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது.
இதைத் தொடர்ந்து, நேற்று தேர்தல் ஆணையம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவியிலிருந்து சந்தீப் மிட்டலை விடுவித்தது. இந்நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை அல்லது நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாக கவனிப்பார்.தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
