உள்நாட்டுப் பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் சமச்சீர் முதலீட்டுத் திட்டங்களை நாடியுள்ளனர். இந்த முதலீட்டாளர் நகர்வு 2025-26 நிதியாண்டில் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் (Hybrid mutual funds) திட்டங்களில் ரூ.1.55 லட்சம் கோடி மொத்த முதலீட்டிற்கு வழிவகுத்தது. இது முந்தைய நிதியாண்டை விட 29 சதவீதம் அதிகமாகும்.
ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளில் முதலீடு செய்கின்றன. ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளின் நோக்கம் இடர் மற்றும் வருமானத்தைச் சமநிலைப்படுத்துவதாகும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அமைப்பான இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, ஹைப்ரிட் ஃபண்ட் ஃபோலியோக்கள் முந்தைய ஆண்டு 15.6 மில்லியனாக இருந்த நிலையில், 2026 மார்ச் மாதத்துக்குள் 19 மில்லியனாக அதிகரித்துள்ளன.
இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் புதிய முதலீட்டாளர் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களும் (AUM) 2025 மார்ச் மாதம் ரூ. 8.83 டிரில்லியனாக இருந்ததில் இருந்து ரூ. 10.35 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ராதிகா குப்தா கூறுகையில், “நிலையற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் சமச்சீரான முதலீட்டு விருப்பங்களைத் தேடுவதால் ஹைப்ரிட் ஃபண்டுகள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஹைப்ரிட் ஃபண்டுகளின் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் (AUM) அதிகரிப்பு பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் தொகுப்புகள் மற்றும் சொத்து ஒதுக்கீட்டின் அடிப்படையிலான முதலீடுகளுக்கான விருப்பம் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. ஒப்பீட்டளவில் குறைந்த அபாயத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஹைப்ரிட் ஃபண்டுகள் இப்போது விருப்பமான தேர்வாக மாறி வருகின்றன” என்றார்.
