சருமத்தில் கரும்புள்ளிகளை (Dark Spots) நீக்க உதவும் அரிசி ஸ்கிரப் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் தூசு காரணமாக கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மூக்கு, தாடை மற்றும் நெற்றியைச் சுற்றித் தெரியும் சிறிய பருக்கள், முகத்தின் இயற்கையான பொலிவைக் குறைக்கக்கூடும். சந்தையில் பல சருமப் பராமரிப்புப் (skin care products) பொருட்கள் கிடைத்தாலும் அவை விலை உயர்ந்தவை என்பதால் அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியாது. அதே சமயம் நமது வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டே சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆம் அரிசி ஸ்க்ரப் அத்தகைய ஒரு எளிமையான மற்றும் பிரபலமான தீர்வாகக் கருதப்படுகிறது.
சருமத்தில் கரும்புள்ளிகள் வருவது ஏன்?
சருமத் துளைகளில் அதிகப்படியான எண்ணெய், தூசி, அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் சேரும்போது கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் உருவாகின்றன. இந்த அழுக்கு ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) அடைந்து கருமையான நிறமாக மாறினால், அது கரும்புள்ளிகளாகிறது. சருமத் துளைகள் அடைபட்டு, அழுக்கு உள்ளே சிக்கிக்கொள்ளும்போது, வெண்புள்ளிகள் எனப்படும் சிறிய வெள்ளைக் கட்டிகள் உருவாகின்றன.
முகத்திற்குப் பூச அரிசி ஸ்கிரப் தயாரிப்பது எப்படி?
அரிசி ஸ்க்ரப்பைத் தயாரிக்க சிறிதளவு அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும். அது மென்மையாக இருக்கக் கூடாது. சிறிதளவு காய்ச்சாத பாலை அதனுடன் (rice scrub for face) சேர்த்துக்கொள்ளலாம். இது சருமத்தை மென்மையாக்க உதவும். இவற்றுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் நன்றாகக் கலந்து ஒரு கெட்டியான பசை போல உருவாக்க வேண்டும்.
இந்த அரிசி ஸ்கிரப்பை உங்கள் முகத்தில் தடவி 2-3 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக கரும்புள்ளிகள் அதிகமாகச் சேரும் மூக்கு மற்றும் தாடை போன்ற பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி, சுத்தமான துண்டால் மெதுவாகத் துடைக்க வேண்டும். இதற்கு பிறகு மாய்ஸ்சரைசரை (Moisturizer) பயன்படுத்தலாம்.
அரிசி ஸ்கிரப் பயன்கள்
அரிசி ஸ்க்ரப் சருமத்தைச் சுத்தப்படுத்தவும், மென்மையாக இறந்த செல்களை (skin Benefits of rice scrub) அகற்றவும் உதவும். அதாவது அரிசியின் துகள்களை அப்ளை செய்வதன் மூலம் இறந்த சரும செல்கள் மற்றும் அதிகப்படியான அழுக்குகளை அகற்ற உதவுகின்றன. இதனால் சருமம் தூய்மையாகவும், மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை செய்து வரை முகத்தில் கரும்புள்ளி, வெண்புள்ளி பிரச்சனைகள் குறையும்.
