இரவில் சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்களின் லைட் வெளிச்சத்தால் சிலருக்கு கண்களைக் கூசச் செய்யும். இதற்கான காரணம் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி? கண் மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் இதோ…
“சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் கண்கள் கூசுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் இள வயதுக்காரரா, வயதானவரா என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்சினைக்கான காரணமும் வேறுபடும்.
இள வயதினருக்கு கண்களில் ‘ரீஃப்ராக்டிவ் எரர்ஸ்’ (Refractive errors) எனும் பார்வை குறைபாடுகள் இருக்கலாம். கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை பிரச்சினைகள் இருக்கலாம். தவிர அஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) எனப்படும் கருவிழிக் கோளாறு போன்றவை இருந்தாலும் வாகன வெளிச்சத்தால் கண்களில் கூச்சம் ஏற்படலாம். இந்த அறிகுறியை உணர்ந்தால் கண் மருத்துவரை அணுகி, பவர் செக் செய்து, கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர, இன்று நிறைய பேர் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்யும்போது கண்களை இமைக்க மறந்து விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கண்களில் வறட்சி (Dry Eyes) ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையாலும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்கள் கூசும்.
வயதானவர்களுக்கு வெளிச்சத்தைப் பார்க்கும்போது இப்படி கண்களில் கூச்சம் ஏற்பட்டால் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு இருக்கலாம். கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, அதை உறுதிசெய்து அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.
எனவே கண் கூச்சம் என்பதை உங்கள் வயதைப் பொறுத்து அணுக வேண்டும். மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : சபாநாயகர் தேர்தல் முதல் ஆளுநரின் டெல்லி பயணம் வரை!
கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் மசாலா பக்கோடா