வீரப்பன்… 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக போலீசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
ஈரோடு, கோவை, தர்மபுரி மாவட்ட மலைப் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த வீரப்பன், தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தையே காட்டுக்குள் கட்டமைத்தார். அவரது அனுமதியின்றி அங்கே அரசியல்வாதிகள், போலீஸ் என யாருமே நுழைய முடியாது என்ற செல்வாக்குமிக்கவராக வலம் வந்தார்.
வீரப்பன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர், மக்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்துகொடுத்தவர் என்று இன்றளவும் வீரப்பனை ஒரு சாரார் கொண்டாடுகின்றனர்.
அதேவேளையில், காட்டு யானைகளை வேட்டையாடியவர், சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டவர், பெரும் கொலைகாரர் என்ற விமர்சன பார்வையும் வீரப்பன் மீது உள்ளது.
வீரப்பன் வாழ்ந்த காலகட்டத்தில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், காவல்துறையின் பெரும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். வீரப்பனைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படும் என்று தொடர்ச்சியாக அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை சூழல் இந்த 20 வருடங்களில் எந்த அளவிற்கு மாற்றமடைந்துள்ளது என்பதை பார்க்கலாம்…
1990-ஆம் ஆண்டு வீரப்பனை முதல் முதலில் காட்டில் சந்தித்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வீரப்பன் உயிருடன் இருந்த வரை அரசு அதிகாரிகளுக்கு இந்த பகுதியில் நுழைய தைரியம் இல்லை.
அவரது மரணத்திற்கு பிறகு இப்பகுதியில் சாலைகள், மின்சாரம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் வந்துள்ளது.
அதேவேளையில், வீரப்பன் மறைவிற்கு பிறகு மக்கள் அந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர தொடங்கிவிட்டனர். இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரும் சாதகமாக அமைந்துவிட்டது. அதனால் காடுகளில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் ரிசார்ட்டுகள் காளான்கள் போல் முளைத்துள்ளது” என்கிறார்.
வீரப்பன் மறைவிற்கு பிறகு பழங்குடியின மக்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறைந்துள்ளதாக சொல்கிறார் வழக்கறிஞரும் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் உறுப்பினருமான பாலமுருகன்.
இவர் எழுதிய ‘சோளகர் தொட்டி’ புத்தகத்தில் பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட காவல்துறை அடக்குமுறைகள் குறித்து ரத்தமும் சதையுமாக விவரித்திருப்பார்.
மேலும், அவர் கூறும்போது, “வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் சிறையிலேயே இறந்துவிட்டனர்” என்று நினைவு கூர்கிறார் பாலமுருகன்.
தர்மபுரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் கூறும்போது, “வீரப்பன் உயிரோடு இருந்தபோது, கால்நடைகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்குள் அழைத்துச் செல்வோம். அப்போது எங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.
ஆனால், தற்போது வனத்துறை அதிகாரிகள் எங்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்னிடம் 150-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தது. தற்போது 30 மாடுகள் மட்டுமே இருக்கிறது” என்கிறார்.
வீரப்பனின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மூலக்காட்டில் காவிரிக்கரையோரம் உள்ள அவரது நினைவிடத்தில் வீரப்பன் குடும்பத்தினர், பாமக மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
வீரப்பன் மறைந்து 20 ஆண்டுகள் ஆகியும் அங்குள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!
தேர்தல் பத்திரம் முதல் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு வரை : யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா?