பல்வலி என்பது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.
பல் சொத்தை, ஈறு தொற்று, பல் உடைதல், அறிவுப் பல் முளைத்தல் அல்லது பல் வேரில் ஏற்படும் தொற்று போன்ற பல காரணங்களால் பல்வலி வரலாம்.
பல்வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதுதான் நிரந்தரத் தீர்வு. இருப்பினும், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க முடியாத சூழலில், சில எளிய வீட்டு வைத்தியங்கள் வலியை தற்காலிகமாகக் குறைக்க உதவலாம்.
ஆனால், இவை சிகிச்சைக்கு மாற்றாக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொப்பளியுங்கள்
பல்வலிக்கு வீட்டில் முதலில் முயற்சிக்கக்கூடிய வழிகளில் ஒன்று உப்பு நீரில் கொப்பளிப்பது. இது இயற்கையான கிருமிநாசினியாக செயல்பட்டு, பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற உதவுகிறது.
மேலும், ஈறுகளில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் உதவக்கூடும்.
குளிர் ஒத்தடம் கொடுங்கள்
பல் அல்லது தாடைப் பகுதியில் வீக்கம் இருந்தால், ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி கன்னத்தின் வெளிப்புறத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம்.
இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி, வலி மற்றும் வீக்கம் தற்காலிகமாகக் குறையலாம். குறிப்பாக காயம் காரணமாக ஏற்பட்ட பல்வலிக்கு இது உதவியாக இருக்கும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு கொப்பளிப்பு
3% ஹைட்ரஜன் பெராக்சைடை சம அளவு தண்ணீரில் கலந்து கொப்பளிப்பது, வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் குறைக்கவும், ஈறு அழற்சியைக் கட்டுப்படுத்தவும் உதவலாம்.
ஆனால் இந்தக் கலவையை விழுங்கக் கூடாது. சிறிய குழந்தைகள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கிராம்பு எண்ணெய் தற்காலிக நிவாரணம் தரலாம்
கிராம்பில் உள்ள யூஜெனால் (Eugenol) என்ற இயற்கைச் சேர்மம் லேசான வலி நிவாரணத் தன்மை கொண்டது.
சிறிதளவு கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து வலி இருக்கும் பகுதியில் மெதுவாகத் தடவினால் சிலருக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம். அதிக அளவில் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.
பூண்டு சிலருக்கு உதவக்கூடும்
பூண்டில் உள்ள அலிசின் (Allicin) என்ற இயற்கைச் சேர்மம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
சிலர் பூண்டை நசுக்கி வலி இருக்கும் பகுதியில் பயன்படுத்துவார்கள். ஆனால் இது வாய்ப்பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
வலியுள்ள பக்கத்தில் உணவை மென்று சாப்பிடாதீர்கள்
பல்வலி இருக்கும் போது மிகவும் சூடான, மிகவும் குளிர்ந்த, இனிப்பு அல்லது கடினமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வலி இல்லாத பக்கத்தில் மென்று சாப்பிடுவது, பாதிக்கப்பட்ட பல்லின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
வாய்ச் சுகாதாரத்தைப் புறக்கணிக்க வேண்டாம்
பல்வலி இருக்கிறது என்பதற்காக பல் துலக்குவதை நிறுத்தக் கூடாது. மென்மையான பிரஷ் பயன்படுத்தி தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதோடு, பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற ஃப்ளாஸ் பயன்படுத்துவதும் நல்லது.
சில நேரங்களில் பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களால்கூட வலி ஏற்படலாம்.
எப்போது உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்?
பல்வலி இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, காய்ச்சல், முகம் அல்லது ஈறுகளில் கடுமையான வீக்கம், சீழ் வடிதல், விழுங்குவதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டு வைத்தியங்கள் வலியைக் குறைக்க மட்டுமே உதவும். ஆனால் பல் சொத்தை, தொற்று அல்லது பல் வேரில் ஏற்பட்ட பாதிப்பு போன்ற அடிப்படை காரணங்களுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.
