புவி வெப்பமயமாதலின் விளைவுகளில் ஒன்றாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடையின் போது அனல் சுட்டெரித்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிக வெப்பநிலை பதிவானது.
23 முதல் 27 வரை ஆசிய கண்டமே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமாக இருக்கும் எனவே வெளியில் செல்வதை தவிர்க்கவும் என்று வாட்ஸ் அப்பிலும் செய்தி பரவியது.
சென்னை வானிலை மையத்தின் புள்ளி விவரங்களின்படி, வழக்கமாக ஏப்ரல் இறுதி அல்லது மே மாதங்களில் தான் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் மேலான வெப்பநிலை பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்தே 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகபட்சமாக மார்ச் 23 ஆம் தேதி அன்றுதான் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நடப்பு மார்ச் மாதத்தில் தான் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் (மார்ச் 23) பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக, 2013 மார்ச் 30 ஆம் தேதி 103 டிகிரி பதிவானதே உச்சகட்ட வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
