‘என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!

Published On:

| By Kavi

வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடல் நலக் குறைவு காரணமாக நள்ளிரவு காலமானர். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2001 – 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவை தங்கம்.

அக்கட்சி மீதான அதிருப்தியின் காரணமாகத் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 12.28 மணிக்குக் காலமானார்.

கோவை தங்கம் உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலை இறுதி அஞ்சலி நடைபெறவுள்ளது.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்.

மாற்றுக் கட்சிகளிலிருந்தபோதும், திமுகவில் இணைந்த பின்பும் என எப்போதுமே அவர் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் ஆவார்.

கோவை தங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

தலைமை நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் பரிந்துரை நிறுத்திவைப்பு : இது முதல் முறையல்ல!

நேரக் கட்டுப்பாடு : பட்டாசு வியாபாரிகள் கடிதம் அனுப்பி போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share