தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாங்காட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பட்டாசு வெடிக்கும் நேரம் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி,
மாங்காட்டில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதங்களை அனுப்பினர்.
மேலும், தமிழகத்தில் அணு உலைகள், தோல் தொழிற்சாலைகளால் ஏற்படாத மாசு ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்டு விடுமா என்றும் இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும்,
பட்டாசு விற்பனையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களை பாதுகாக்கவும், உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள இந்தச் சட்டத்தை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துணைத் தலைவர் ராம.பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதம் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
-ராஜ்
ஆர்.எஸ்.எஸ். பேரணி: தடை விதிக்க நடவடிக்கை – திருமாவளவன்