Panchayat President Beaten to Death: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்சனையில் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் என்பவர் செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வள்ளியூர் கண்ணநல்லூரி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மகாராஜன் (வயது 68). தாமரைக்குளத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற கூலித் தொழிலாளி, தமது வீட்டுக்கு மட்டும் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என மகாராஜனுடன் தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கல்லை அடித்து மகாராஜன் மீது இசக்கியப்பன் வீசினார். இதில் பலத்த காயமடைந்த மகாராஜன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜன் உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து மகாராஜனை கொலை செய்ததாக கூலித் தொழிலாளி இசக்கியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழு விசாரணை- கனிமொழி கோரிக்கை
இச்சம்பவம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் திரு. மகாராஜன் அவர்கள் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குடிநீர் பிரச்சனைக்காகப் போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளது.
இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
