தலைவர் தேர்தல்: மாசெக்களிடம் ஆதரவு திரட்டும் ஸ்டாலின் 

Published On:

| By Aara

திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் நிறைவு கட்டத்தை எட்டியிருக்கிறது. கிளைச் செயலாளர் தேர்தல் முதல் மாசெக்கள் தேர்தல் வரை முடிந்துவிட்ட நிலையில்  தலைமைக் கழகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அதன் பின் அக்டோபர் 9 ஆம் தேதி புதிய தலைவர், புதிய பொதுச் செயலாளர், புதிய பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளோடு புதிய பொதுக்குழு கூடுகிறது.

அக்டோபர் 7 ஆம் தேதி தலைவர் தேர்தலில் தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.  இந்த நிலையில் ஸ்டாலின் சற்று உணர்வு பூர்வமாகவே இருப்பதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

2018 ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைந்த நிலையில், அப்போது செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் பொதுக்குழு மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   அப்போது பல மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஸ்டாலின் அப்போது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களால் ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கட்சியில் முறைப்படி தேர்தல் நடத்தி அந்த தேர்தலின் வழியாக தலைவர் ஆகவில்லை என்ற ஒரு சிறு குறை அவருக்கு இருந்தது.  அந்த குறை இப்போது நடக்கிற உட்கட்சித் தேர்தல் மூலம் அது நீங்கியிருக்கிறது.

dmk leader election

2014 ஆம் ஆண்டு நடந்த 14 ஆவது உட்கட்சித் தேர்தலுக்குப் பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தல், அதன் பின் கொரோனா ஊரடங்கு, 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றால் உட்கட்சித் தேர்தல் தாமதமானது.

இப்போது முறையாக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பிறகு கட்சியின் சட்ட திட்ட விதிகளின்படி ஸ்டாலின் முதல் முறையாக இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதனால் கடந்த ஓரிரு நாட்களாக ஸ்டாலினே மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அலைபேசி செய்து,  ‘நீங்க மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். நான் தலைவர் தேர்தலில் போட்டியிடுறேன். நீங்க ஆதரவு அளிக்கணும்’ என்று முறைப்படி ஜனநாயக ரீதியாக ஆதரவு கேட்டுள்ளார்.  ‘தலைவரே… இதெல்லாம் நீங்க சொல்லணுமா?’ என்று மாவட்டச் செயலாளர்களும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தத்தமது மாவட்ட நிர்வாகிகளோடு திமுக தலைவர் ஸ்டாலினை இன்று முதல் அறிவாலயத்தில் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். இன்று (அக்டோபர் 5) மாலை 10 மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்தனர்.

நாம் சில மாசெக்களிடம் பேசியபோது, “தலைவர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்காரு.  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி  2021 இல் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றாரோ,

அதேபோல் இப்போது கட்சித் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக தலைவராகிறார்.  அதனால நாங்க என்ன செஞ்சிருக்கோம்னா…. ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தலைவரை முன்மொழிந்து மனுக்கள் கொடுக்கிறோம்.

பொதுவாக ஐந்து பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிந்து ஐந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிஞ்சா போதுமானது. ஆனால் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தலைவருக்காக முன் மொழிந்து வழிமொழிந்திருக்கிறோம். ஒட்டுமொத்த திமுகவும் துளி கூட மாற்று யோசனையின்றி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுக்கிறோம்” என்கிறார்கள்.

-வணங்காமுடிவேந்தன்

அமித் ஷா -பன்னீர் சந்திப்பு எப்போது? வைத்திலிங்கம் தகவல்!

பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share