திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28 ஆம் தேதி அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக வின் 15வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்.,9, காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ‛செயின்ட் ஜார்ஜ்’ பள்ளியில் நடைபெறும்.
அப்போது திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் அன்றே தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 30) பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்ட பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரையில் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கு போட்டியிடுவோர் வேட்பு மனுக் கட்டணமாக ரூ. 50,000 செலுத்தவேண்டும்.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவோரை திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய, 5 பேர் வழிமொழியவேண்டும்.
அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கலை.ரா
சீனாவை தமிழகம் மிஞ்ச வேண்டும்: பெகாட்ரான் திறப்பு விழாவில் முதல்வர்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கார்கேவுக்காக விலகிய திக் விஜய் சிங்