நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான நீதிபதி சிவஞானத்தை (Justice V. Sivagnanam) பாதுகாப்பாக மீட்க உதவ கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் (Delhi Tamil Advocates Association) விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் அனுப்பிய கடிதம்: உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான வி. சிவஞானம் (ஓய்வு) அவர்களை பாதுகாப்பாக மீட்பதில் உங்களது தலையீட்டையும் உதவியையும் நாடுகிறோம். நேபாள வெள்ளத்தில் சிக்கி கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளார் நீதிபதி வி. சிவஞானம் .

நீதிபதி வி. சிவஞானம், இந்திய நீதித்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர். 2025-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்.
நீதிபதி சிவஞானம், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் குழுவுடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பேருந்தில் எடுக்கப்பட்ட குழு புகைப்படம் அவர் நேபாளத்தில் இருப்பதை உறுதி செய்தது.
ஆகஸ்ட் 26-ந் தேதி அதிகாலையில் மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு விடுத்தார்; அதன் பின்னர் நீதிபதி வி.சிவஞானத்திடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை.
பேரழிவுக்குள்ளான திமுரே பகுதியில் மீட்கப்பட்ட மற்றொரு பேருந்தில் பயணம் செய்தவர்கள், நீதிபதி சிவஞானம் பயணித்த பேருந்து அவர்களது பேருந்திலிருந்து சுமார் 100-200 மீட்டர் தொலைவில் மட்டுமே இருந்தது என்று குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். ஆகையால் நீதிபதி சிவஞானத்தின் குடும்பத்தினரும் நாங்களும் அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்துக் கவலை கொண்டுள்ளோம்.

இந்த வேண்டுகோளை இந்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முன்னெடுத்து நீதிபதி வி. சிவஞானம் அவர்களைக் கண்டறியவும், அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும், அவரை இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அழைத்துவரவும் உதவ வேண்டுகிறொம். இவ்வாறு டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல மத்திய அரசுக்கும் டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.
