பொதுவாகப் போலீசார் எச்சரிக்கை விடுத்தாலே அது மிகவும் சீரியஸாக, பயமுறுத்தும் தொனியில் தான் இருக்கும். ஆனால், டெல்லி போலீஸ் (Delhi Police) ரூட்டே தனி! மும்பை போலீசுக்கு இணையாக, இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள மீம்ஸ் மற்றும் சினிமா வசனங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இவர்கள் கில்லாடிகள்.
அந்த வகையில், தற்போது இணையத்தைக் கலக்கி வரும் ‘துரந்தர்‘ (Dhurandhar) பட ட்ரெண்டைப் பயன்படுத்தி அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
என்ன அது ‘துரந்தர்’ ட்ரெண்ட்? ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரொமோஷனுக்காக “Day 1 as a Spy” (உளவாளியாக முதல் நாள்) என்ற கான்செப்ட் இணையத்தில் வைரலானது. இதைத்தான் டெல்லி போலீஸ் இப்போது “Day 1 as a Scammer” (மோசடிப் பேர்வழியாக முதல் நாள்) என்று மாற்றித் தங்கள் பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில் என்ன இருக்கிறது? அந்த வீடியோவில், ஒருவர் அப்பாவிப் பொதுமக்களிடம் சென்று, “உங்கள் போனில் வைரஸ் இருக்கிறது, நான் ஆன்டி-வைரஸ் (Antivirus) போட்டுத் தருகிறேன்” என்று நயவஞ்சகமாகப் பேசுகிறார். அதை நம்பி மக்கள் போனைக் கொடுத்ததும், அந்த நபர் லாவகமாக வங்கி கணக்கு விவரங்களைத் திருடி, அவர்களின் போனுக்கு வரும் ஓடிபி-யை (OTP) ஷேர் செய்து பணத்தைச் சுருட்டுகிறார்.
இறுதியில், “தெரியாத நபர்களிடம் போனைக் கொடுக்காதீர்கள், தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யாதீர்கள்” என்ற செய்தியோடு வீடியோ முடிகிறது.
ஏன் இந்த விழிப்புணர்வு? இன்று ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் பலவிதம். “உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படும், கேஒய்சி (KYC) அப்டேட் செய்யுங்கள்” என்று வரும் அழைப்புகளைத் தாண்டி, இப்போது நேரில் வந்து உதவி செய்வது போல நடித்துத் தகவல்களைத் திருடும் கும்பல்களும் அதிகரித்துவிட்டன. ஆன்டி-வைரஸ் என்ற பெயரில் உளவு பார்க்கும் செயலிகளை (Spyware) இன்ஸ்டால் செய்யவும் வாய்ப்புள்ளது.
மக்கள் வரவேற்பு: “சீரியஸான விஷயத்தைச் சிரிக்கும்படி சொல்வது டெல்லி போலீசுக்கு மட்டுமே கைவந்த கலை” என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பாலிவுட் மசாலாவையும், மக்கள் பாதுகாப்பையும் மிகச் சரியாகக் கலந்திருக்கிறது இந்த ‘துரந்தர்’ ரீல்ஸ்!
