மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் சொத்து வரி உயர்வு முடிவை எடுத்துள்ளனர் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்ந்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மூன்று முதல் நான்கு மடங்கு வரி அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதை சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மறுத்துள்ளார். சொத்துவரி உயர்த்தப்படவில்லை திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியான இந்த அறிவிப்புக்கு கீழே சொத்து வரி உயர்ந்திருப்பதாக சென்னை மக்கள் ஆதாரங்களுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்திய வட்டார இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் சொத்து உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “சொத்து வரி உயர்வு என்பது மக்களை அவதிக்குள்ளாக்கும் செயல். மறு மதிப்பீடு செய்கிறோம் என்ற பெயரில் அதிகமான தொகையை மக்கள் தலையில் கட்டியுள்ளனர். மாநகராட்சிக்கு சொத்துவரி என்பது மிக முக்கியமான வருவாய் ஆதாரம்.
ஆனால் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் எனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் ஆலோசிக்க வேண்டும். சொத்து வரி குறித்து கவுன்சிலர்கள் மத்தியில் விவாதித்து முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் முடிவை அறிவித்துவிட்டு தான் மேயரான என்னிடமே தகவல் சொல்கின்றனர்.
இந்த மாத மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை எழுப்புவார்கள்”என்று கூறியுள்ளார்.
