தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் மைய குழு கூட்டம் இன்று ஏப்ரல் 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந் தேதி கடைசி நாள். ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பிற கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்து பிரசாரத்தில் இறங்கிவிட்டனர்.
அதேநேரத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பங்கேற்கும் பாஜகவின் மைய குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
