”சட்டப்பேரவையில் கன்னிப்பேச்சை  தவிருங்கள்” : என்ன சொல்கிறார் வானதி சீனிவாசன்

Published On:

| By Kavi

தமிழக  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் முதல்முறை உறுப்பினர்களாக உள்ளனர்.  இவர்கள் முதன்முதலில் பேசும்போது தங்களது கன்னிப்பேச்சை தொடங்குவதாக கூறுகிறார்கள். 

இந்நிலையில் கன்னிப்பேச்சு என்று கூறுவதை தவிருங்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக நிர்வாகியுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ” ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவ்வப்போது அவற்றைக் கவனித்து வருகிறேன். இந்த சட்டமன்றத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பேசும்போது, “எனது கன்னிப் பேச்சைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிடுகின்றனர். இன்று (20.8.2026) திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் டாக்டர்.அருண்குமார் பேசும்போதும், தனது கன்னிப் பேச்சைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

பொதுவாக, திருமணமாகாத பெண்களை ‘கன்னி’ என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில், ‘கன்யா’ என்பது இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல். ‘கன்னி’ என்ற சொல் கற்பு ஒழுக்கத்தின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2021-ல் கோவை தெற்கு தொகுதியில் வென்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட பலரும் அதை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.

ADVERTISEMENT

சட்டமன்றத்தில் முதல் முறையாக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் வார்த்தை. என்னைப் பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.

அதற்குப் பதிலளித்த அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் திரு. அப்பாவு அவர்கள், எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.

இப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருக்கும் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், இதைக் கவனத்தில் கொண்டு, ‘கன்னிப் பேச்சு’ என்று உறுப்பினர்கள் கூறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். இனி உரையாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share