வட இந்தியாவில் இந்தி மொழி பேசும் இன்ப்ளூயன்சர்ஸ் மூலம் தமிழக முதல்வர் விஜய் செய்த சாதனைகள் என்ற பெயரில் அதிர்ச்சி தரும் வகையில் ஏராளமான கட்டுக் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களின் மூலம் பிரசாரம் செய்வதை அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. ஆனால் வட இந்தியாவில் இந்தி மொழி பேசும் இன்ப்ளூயன்சர்ஸ் மூலம் முதல்வர் விஜய்யின் சாதனைகள் பெயரில் ஏராளமான பொய்யான வீடியோக்கள் வலம் வருகின்றன.
வட இந்தியாவில் பரவி வரும் தமிழக முதல்வர் விஜய்யின் சாதனைகள் என்ற பெயரிலான பொய்யான வீடியோக்கள் குறித்து ALT News முகமது ஜூபைர் தமது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத முதல்வர் விஜய் அறிவித்ததாக சொல்லப்படும் பொய்யான அறிவிப்புகளில் சில..
- தமிழ்நாட்டில் பலாத்கார குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்கு தண்டனை அல்லது என்கவுண்ட்டர் செய்ய முதல்வர் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
- மசூதிகளில் இமாம்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
- தமிழக முதல்வர் விஜய் பெட்ரோல் விலையை 1 லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் கோவில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை பள்ளிகூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மாற்ற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இப்படியாக பொய்யாக பரப்பிவிடப்படும் வீடியோக்கள் பல லட்சம் லைக்ஸ், ஷேர்கள் செய்யப்பட்டும் வருகின்றன. இவ்வாறு ஊடகவியலாளர் முகமது ஜூபைர் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவுக்கு ”ரூட்” போட்ட ”ரூட்”
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலின் போது இதே பாணியில்தான் விஜய்யின் தவெகவுக்கு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நடத்தும் The Route நிறுவனம்தான் இத்தகைய சோசியல் மீடியா பிரசாரத்தை முன்னெடுத்தது.
தற்போது வட இந்தியாவிலும் இதே பாணியிலான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் விஜய்யின் புகழ் பாடுவதற்காக The Route நிறுவனம்தான் இன்ப்ளூயன்சர்ஸை பெரும் தொகைக்கு களமிறக்கியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
