21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில் நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இவர்களை தவிர மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததால் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரி வழங்கிய மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
இதை ஏற்று சபாநாயகர் 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களின் செயலை மன்னித்து பொதுச்செயலாளர் கடிதம் கொடுத்திருந்தாலும் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை தொடர வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
சட்டப்படி 15 நாட்களுக்குள் அவர்களை மன்னித்து கடிதம் அளித்துவிட்டால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது. எனவே அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரியே என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
