சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறும் தென் மண்டல மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டுக்கு நேற்று (ஆகஸ்ட் 19) வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் வரவேற்றார். அதே நேரத்தில் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் காங்கிரஸ் சென்னையில் கண்டனப் போராட்டம் நடத்தியது.


தென் மண்டல மாநிலங்களின் 31-வது கூட்டம் இன்று கோவளத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் பாஜகவின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனையடுத்து கோவளம் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷாவை முதல்வர் விஜய் வரவேற்றார்.
காங்கிரஸ் போராட்டம்- கைது
இதனிடையே சென்னையில் நேற்று இரவு அமித்ஷாவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில், பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் உரிமைக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதால் அமித்ஷாவைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்.







சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், கே. எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், துணை தலைவர் ஜமால் முகமது யூனிஸ், மக்களவை உறுப்பினர் ஆர். சுதா, மாநில இயக்கச் சீரமைப்புத் திட்டக்குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் திரு. ரூபி மனோகரன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் நேரில் சந்தித்தார்
