தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. சசிகலா ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து இந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.
தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருபவர்கள் பலரும் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி, பெல்ஜியத்தில் நடைபெறும் உலகின் மிகச் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் கலந்துகொண்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதற்கு அஜித் குமாரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் விதமாக நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அஜித்துடன் எடப்பாடி பழனிசாமி இருப்பது போன்ற புகைப்படங்களைத் தொண்டர்கள் எடப்பாடியிடம் வழங்கினர். அஜித் ரசிகர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு அஜித் கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது, “என் சுயலாபத்திற்காக எனது ரசிகர்களைப் பயன்படுத்த மாட்டேன்” என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை அஜித் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
