நம்மில் பலரும் சமையல் என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று நினைத்திருப்போம். குறிப்பாக ஆண்கள் சமைக்க பயந்து சமையலறை பக்கம் போகாமல் ஹோட்டல்களில் வாங்கிச் சாப்பிட்டு வருவார்கள். அதேபோல விதவிதமாக சமையல் செய்தாலும் சிலருக்கு சுவையாக இல்லையே என்று தோன்றும். சின்ன சின்ன டிப்ஸ்களை ஃபாலோ செய்தாலே சமையல் சுவையாகவும் அற்புதமாகவும் அமையும். அது மேலும் மேலும் நம்மை சமையலில் மெருகூட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
- எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது அது மணமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு துண்டு இஞ்சியை அதனுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
- சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நான்கு பிரட் துண்டுகளை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசையலாம். அப்படி செய்தால் சப்பாத்தி சுடும்போது மிருதுவாக வரும். சப்பாத்தி சுவையும் கூடும்.
- ரசத்திற்கு பூண்டு, மிளகு சேர்க்கும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு கொள்ளு அரைத்து சேர்த்தால் ரசம் சுவையாகவும் இருப்பதோடு, உடலில் வாயு பிரச்சனையும் இருக்காது.
- காய்கறிகளை அவியல் செய்து முடித்த பிறகு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிரும் சேர்த்து கலக்கலாம். இவற்றை சேர்க்கும்போது அவியல் நல்ல ருசியாக இருக்கும்.
- துவரம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் காலையில் வைக்கும் சாம்பார் இரவுவரை கெடாமல் இருக்கும்.
- கொதித்து ஆறிய பாலை மூடி வைக்காமல் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் அதிகளவு பாலாடை கிடைக்கும்.
- பால் பாயாசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
- வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து கலந்து வடை சுட்டு எடுத்தால், மிருதுவாக இருக்கும். அதிக எண்ணெய்யும் குடிக்காது.
- பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பாகு முறியாது.
- எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
இந்த டிப்ஸ்களை வீட்டிலேயே ட்ரைப் பண்ணி பாருங்க..
