இலங்கை: மீண்டும் குண்டுவெடிப்பு – அவசர நிலை பிரகடனம்!

Published On:

| By Balaji

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 22) நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்படுகிறது. நாளை துக்க தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கொழும்புவில் 3மணிக்கு மேல் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஈஸ்டர் தினமான நேற்று (ஏப்ரல் 21) இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. புனித அந்தோணியார் தேவாலயம், கொழும்பு செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம், நீர்கொழும்பு சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு, சின்னாமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்குரி லா ஹோட்டல், கொழும்பு தி கிங்ஸ்பரீ ஹோட்டல், கொழும்பு தெஹிவளா உயிரியல் பூங்கா என 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. காலை 8.45 முதல் 9.15 மணி வரை 6 இடங்களிலும், மதியம் 1.45 மணியளவில் 2 இடங்களிலும் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

ADVERTISEMENT

இதில் நேற்று இரவு வரை 3 போலீசார் உட்பட 207 பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி, 290ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

** இந்தியர்கள் உயிரிழப்பு**

ADVERTISEMENT

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர் மற்ற விவரங்களை விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ரங்கப்பா மற்றும் ஹனுமந்தாராயப்பா என மேலும் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார். ‘இருவரையும் எனக்கு நன்கு தெரியும்” என்று குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ”இருவரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவரது குடும்பத்துடன் துணை நிற்பேன்” என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”அதே கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மணா கவுடா ரமேஷ் , கே.எம். லட்சுமிநாராயண் ஆகிய மேலும் இருவர் உயிரிழந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுதவிர, துபாய்க்குக் குடிபெயர்ந்த கேரளத்தைச் சேர்ந்த ரசீனா என்ற பெண்ணும் குண்டுவெடிப்பில் உயிரிழந்திருக்கிறார். எனவே இலங்கை குண்டுவெடிப்பில் 8 இந்தியர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுபோன்று, அமெரிக்கா பிரிட்டன், சீனா, ஜப்பான், போர்ச்சுக்கல், என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

**இஸ்லாமிய அமைப்பு காரணமா?**

சர்வதேச மதச்சார்பற்ற சுதந்திர அறிக்கை 2017ன் படி, 2 கோடி மக்களை கொண்ட இலங்கையில் 70 சதவிகித புத்த மதத்தினரும், 12.6 சதவிகித இந்து மதத்தினரும், 9.7 சதவிகித முஸ்லிம் மதத்தினரும், 7.6 சதவிதம் பேர் கிறிஸ்துவ மதத்தினருமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் மதச் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுவரை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், பெரும்பாலான தாக்குதல் தற்கொலைப் படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்திருக்கிறார். இதுவரை சம்பவத்துக்குத் தொடர்புடைய பெண்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் வெளிநாட்டு நபர்களின் உதவி இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.

**உளவுத் துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?**

”சில உளவுத் துறை அதிகாரிகள் இந்த அசம்பாவிதம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு தீவிர நடவடிக்கை தேவைப்பட்டும் ஏன் அந்த எச்சரிக்கை பொருட்படுத்தாமல் விடப்பட்டது?” என்று இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் ஒரு கடிதம் ஒன்றையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் தலைமையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

**டென்மார்க் தொழில் அதிபரின் மூன்று குழந்தைகள் பலி**

டென்மார்க்கின் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமான, ஆண்டர்ஸ் ஹொல்ச் பொவுல்சென் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சுற்றுலாவுக்காக இலங்கை சென்றிருக்கின்றனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஆண்டர்ஸின் மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக டென்மார்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

**அவசரநிலை பிரகடனம்**

முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள இலங்கை அரசு, இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவசரநிலை பிரகடன உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. அதேபோல் நாளை இலங்கை முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரவு 12 மணி முதல் ஈஃபில் டவரின் விளக்குகள் அணைக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது. மேலும் இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு, அங்கு மேலும் பல இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

**மீண்டும் குண்டுவெடிப்பு**.

நேற்று 8 இடங்களில் குண்டுவெடித்த நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு மேல் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிகடை புனித அந்தோணியார் தேவாலயம் அருகே நின்று கொண்டிருந்த வேனில் குண்டு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, குண்டு செயலிழக்கும் பிரிவினர், அதனைச் செயலிழக்கச் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. எனினும், அதற்கு முன்னதாகவே குண்டு வெடித்துள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அச்சமயத்தில், அப்பகுதியிலிருந்து மக்கள் அங்கும் இங்குமாக பதறியடித்து ஓடும் காட்சிகளை தி கார்டியன் செய்தியாளர் மைக்கல் சபி [ட்வீட் செய்துள்ளார்]( https://twitter.com/i/status/1120273473375481857).

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share