அமெரிக்காவில் யூடியூபர் ஒருவர் பார்வையாளர்களை கவர்வதற்காக தனது விமானத்தை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்திய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல யூடியூபர் ஜாகோப். கடந்த 2021-ஆம் ஆண்டு விமானத்தை சேதப்படுத்துகிறேன் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் சிறிய ரக விமானம் முழுவதும் கேமராவை பொருத்திய அவர், அமெரிக்காவின் லாஸ் பட்ரஸ் அடர்ந்த வனப்பகுதியில் தனது விமானத்தை மோத செய்தார்.
இந்த விபத்தில் ஜாகோப் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினார். இதனை தனது யூடியூப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

விமான விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
அமெரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் நடத்திய விசாரணையில், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜேகோப் இயக்கிய விமானம் யூடியூப் பார்வையாளர்களை கவர்வதற்காக திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தன்னை ஒரு அனுபவம் வாய்ந்த விமானி என்று கூறுகிறார். ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அவரிடம் இல்லை.

விமான விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அவர் விமான போக்குவரத்து அலுவலகத்திடம் தெரிவித்தார்.
ஜாகோபிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக அவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மாத இறுதியில் வழக்கின் விசாரணையின் போது அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்வம்