தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 10) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். முன்னதாக, இன்று காலை அவர் மதுரையிலிருந்து பிரச்சார வாகனம் மூலம் சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவரது பிரச்சார வாகனத்தை வழக்கம்போல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விஜய் வாகனம் சென்றபோது, அதைப் பின்தொடர்ந்து இரு இளைஞர்கள் சென்ற பைக் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக, விஜய் கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களின்போது, அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ரசிகர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக மாறியுள்ளது. இது குறித்து கட்சித் தலைவராக விஜய் இதுவரை தனது கூட்டங்களில் பேச மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
