சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்காக அரை மணி நேரம் கூடுதல் நேரமெடுப்பதாகவும், இதற்கு வேறு வழியே இல்லையா என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. Waiting time at tollgates
தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தேசிய நெடுஞ்சாலை மத்திய பட்டியலில் உள்ளதால் சாலை பராமரிப்புக்காக பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம். அரசியலமைப்பிற்கு எதிரானது. எனவே மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான்.
ஆனால் மதுரை முதல் சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி வாகனங்கள் கடந்து செல்வதற்கு பயண நேரத்தில் மொத்தம் அரை மணி நேரத்திற்கு மேலாக வீணாகிறது. இதற்கு மாற்று வழி இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.Waiting time at tollgates
