தமிழக தேர்தலில் வாக்களிக்க சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப தொடங்கி உள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. பணியின் காரணமாக சென்னையில் தங்கியிருந்த பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதற்காக சென்னையில் இருந்து கிளம்பியவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களிலும் சொந்த ஊர்களில் இருந்தவர்கள் விடுமுறையை முடித்துவிட்டு பலரும் நேற்று இரவு முதல் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக சென்னை காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சென்னை திரும்பும் மக்கள் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில், தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையை அடைய வேண்டும்.
மேலும், சிங்கப்பெருமாள் கோயில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னையை அடையலாம்.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகை, திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், ECR சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தி சென்னைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
