புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உழவர்கரை தொகுதியில் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக பங்கேற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் எங்களுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தை கால தாமதமானதால், ஆரம்பத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தோம்.
நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருந்தோம். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை மற்றும் ஏனாம் ஆகிய இடங்களில் தனித்துப் போட்டியிடுவதாகச் சொன்னோம். வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எங்களுக்கு உழவர்கரை மட்டும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், வேட்புமனு தாக்கல் காலம் முடிந்த நிலையில், உழவர்கரை உட்பட ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம்ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைத் திரும்பப் பெறும் கால அவகாசமும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக வேட்பாளர் போட்டியிடுவது என்றும், மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக பாடுபடும் என்றும் முடிவானது. அதன்படி, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நாங்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களைத் திரும்பப் பெறாவிட்டாலும், அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட மாட்டோம். மாறாக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக முழு பலத்துடன் பாடுபடுவோம்” என்று திருமாவளவன் கூறினார்.
