தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது உறவினருடன் செல்வதாக கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல். இவர் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா. இவர் வினித் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கிருத்திகாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே கிருத்திகாவை மீட்டுத் தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது கடத்தப்பட்டது குறித்து கிருத்திகாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் அவரை தென்காசி அருகே நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 16 ) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது அப்பா வழி உறவினருடன் செல்வதாக கூறி எழுத்துபூர்வமாக கடிதம் எழுதி நீதிபதிகளிடம் ஒப்படைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவரது உறவினருடன் அனுப்பி வைக்க ஒப்புக்கொண்டனர்.
மேலும், மாரியப்பன் வினித் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனிடையே, தன் காதல் மனைவி கிருத்திகா தன்னுடன் வருவார் என்று காத்திருந்த வினித் ஏமாற்றத்துடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இடைத்தேர்தலில் முறைகேடு? : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்