ADVERTISEMENT

67 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்… நிரம்பி வழியும் மேட்டூர் அணை!

Published On:

| By christopher

mettur dam overflowing in june after 67 years

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (ஜூன் 29) மாலை எட்டியது. இதன்மூலம் 67 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியுது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. mettur dam overflowing in june after 67 years

கர்நாடகா அணை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே போதிய நீர் இருப்பு காரணமாக டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.2 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணை இன்று மாலை மாலை 6 மணியளவில் மேட்டூர் அணை நிரம்பியது.

ADVERTISEMENT

அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது. 1957ம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அணையில் இருந்து 58 ஆயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக வெளியேறியது. அதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் எம்.பி செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் அணை பொறியாளர்கள் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT

மேலும் பொதுமக்களும் பாலத்தில் நின்றபடி அணை நிரம்பி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேறுவதை விசிலடித்து வரவேற்று, குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

எப்போதையும் விட இந்த முறை முன்கூட்டியே நீர்திறக்கப்பட்டதால் காவிரி நீர்க்கால்வாய்ப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது அணை நிரம்பியது அவர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே காவிரி பாயும் 11 மாவட்ட கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share