துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த விமானத்தில் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கடந்த திங்களன்று (நவம்பர் 17) இந்த கண்காட்சி தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படை சார்பிலும் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2.15 மணியளவில் அல்மக்தூர் விமான நிலையத்தில் இந்தியாவின் தேஜஸ் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்ததில் தீப்பற்றியது குறித்த காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
இந்த விபத்தில் தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் விமானியின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப்படை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து நீதி விசாரணை நடைபெறும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

தேஜஸ் விமானம் என்பது இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு இலகுரக, ஜெட்-இயங்கும் போர் விமானமாகும். தேஜஸ் போர் விமானம் கடந்த 2015ம் ஆண்டு முதல் முழுநேரமாக விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மார்ச் 12, 2024 அன்று ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார். இது இரண்டாவது தேஜஸ் விமான விபத்து ஆகும்.
