நடிகர்கள் ரஜினி – கமல் இணையும் படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 173ஆவது படம் உருவாக இருந்தது.
40 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியும் கமலும் இந்த படத்தின் மூலம் கைகோர்த்துள்ளனர். அதோடு சுந்தர் சி இயக்கம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் திடீரென இப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சுந்தர் சி இன்று (நவம்பர் 13) வெளியிட்ட அறிவிப்பில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருடன் இணைந்து பணியாற்றுவது தனது வாழ்நாள் கனவு. எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, கனவுத் திட்டமான தலைவர்173-லிருந்து விலகுவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
சில சமயங்களில் நாம் கனவுகளிலிருந்து விலகி, நமக்காக வகுக்கப்பட்ட பாதையில் பயணிக்க நேரிடுகிறது. இந்த இருபெரும் ஆளுமைகளுடனான தனது உறவு நீண்ட காலமானது. கடந்த நாட்களில் அவர்களுடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன் . அவர்களது வழிகாட்டுதலைத் தொடர்ந்து பின்பற்றுவேன்.
இந்தச் செய்தி எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தால், அதற்கு மனப்பூர்வமான மன்னிப்பு கோருகிறேன். நிச்சயம் எதிர்காலத்தில் உங்களை மகிழ்விக்கும்படியான நல்ல படங்களைக் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
சுந்தர் சி-யின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. அவர் விலகியதற்காக காரணம் என்ன என்பதை தெளிவாக கூறவில்லை.
