சர்க்கரை உற்பத்தி: முதலிடத்தில் இந்தியா!

Published On:

| By Minnambalam

சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 2021-22 கரும்பு சீசனில் சாதனை அளவாக 5,000 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது.

இதன்மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல், சர்க்கரை ஏற்றுமதியில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சர்க்கரை ஆலைகள் மூலம் 359 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் மெட்ரிக் டன், எத்தனால் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

போதிய பருவமழை இருந்ததால் இந்த பருவகாலம், சர்க்கரை உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையில் 109 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியின் மூலம் 40,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது.

சர்வதேச ஆதரவு விலையும், மத்திய அரசின் கொள்கையும் சர்க்கரை துறைக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம்” என்று உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் பின்னடைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share