சினிமாவை வெறுப்பவர்கள் சினிமாவுக்கு எதிராகப் பேசுபவர்கள் எல்லாம் ஒரு நிலையில் தாங்களே சினிமாவுக்கு வருவது புதிய விஷயம் இல்லைதான். ஆனால் இவர்கள் எல்லாம் எங்கே சினிமாத்துறைக்கு வர போகிறார்கள் என்று நினைப்பவர்கள் கூட சினிமாவுக்கு வருவதுதான் சினிமாவின் சக்தி.
தொல். திருமாவளவன் நடிக்கும் படம் ஒன்று ரகசியமாக தயாராகிக் கொண்டிருக்கிறது .
கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் நெல்லு என்ற படத்தில் நடித்தார். அந்த வகையில் இப்போது பெரியாரிஸ்ட் சுப வீரபாண்டியனும் சினிமாவுக்கு வருகிறார்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் என்பவர் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
தியாகராஜ பாகவதர் , கலைவாணர் எஸ்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்வில் மிகப் பெரிய புயலாக அடித்து இருவரையும் சிறைக்கு அனுப்பிய – பத்திரிகையாளர் லக்ஷ்மி காந்தன் கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாம் இது (காந்தா படத்தில் இதைத்தான் சொதப்பி வைத்தார்கள்)
இந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக திரு.சுப. வீரபாண்டியன் நடிக்கிறார்.
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு பற்றிப் பல ஆராய்ச்சிகளைத் தழுவி, வழக்கின் உண்மைச் சம்பவங்கள், இதற்கு பின்னால் அமைந்திருக்கும் மர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைத் தன்மையுடன் கொண்டு வருவதற்காக ஐயா சுப. வீரபாண்டியன் அவர்களும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அடிப்படையில் சுப.வீ அவர்கள் ஒரு வரலாற்று ஆய்வாளர். ஆகையால் இந்தக் கதையை மேலும் உண்மைத் தன்மையுடன் கொண்டு வருவதற்கு அவரது பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது ” என்கிறது படக்குழு .
படத்தில் ரங்கராஜ் பாண்டேவும் நடிக்கிறார்.
படத்திலும் எதிர் எதிர் அணி தானே?
- ராஜ திருமகன்
