கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து மாற்றப்பட்ட எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு மாநிலங்களவை தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி-க்கள் சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, மதிமுக எம்.பி வைகோ, பாமக எம்.பி அன்புமணி, அதிமுக எம்.பி சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. Stalin select sr sivalingam as a rajya sabha
இந்தநிலையில், காலியாகவுள்ள எம்.பி பதவியிடங்களை நிரப்புவதற்காக, வரும் ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மீண்டும் எம்.பி பதவிக்கு வில்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த எஸ்.ஆர்.சிவலிங்கம்?
சேலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவுள்ள உடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.சிவலிங்கம். சேலத்தில் பவர்ஃபுல் மாவட்ட செயலாளராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
25 ஆண்டுகள் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பயணித்த எஸ்.ஆர்.சிவலிங்கம், அந்த சமயத்தில் மாவட்ட துணை செயலாளராக இருந்தார்.
வீரபாண்டியார் மறைவிற்கு பிறகு, 2012-ல் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆனார். நிர்வாக ரீதியாக சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, மேற்கு மாவட்ட செயலாளராக சில காலம் பணியாற்றினார். தற்போது கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
1984-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, முதல்முறையாக சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் எஸ்.ஆர்.சிவலிங்கம் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து 1989-ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி தொகுதியில் மீண்டும் எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991, 2001 தேர்தல்களில் தோல்வியும், 1996-ல் வெற்றியும் பெற்றார். கடந்த 2011-ஆம் ஆண்டு சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மொத்தமாக 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள எஸ்.ஆர்.சிவலிங்கம், இரண்டு முறை வெற்றியும், நான்கு முறை தோல்வியும் அடைந்துள்ளார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுகவின் வேட்பாளர் பட்டியலில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு பதில் மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியான சிவலிங்கம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து அதிருப்தியோடு கிளம்பிச் சென்று, போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். அன்று காணொளி மூலமாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் சிவலிங்கம் கலந்துகொள்ளவில்லை.

இந்தத் தகவல் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதும், முதல்வர் ஸ்டாலின் அவரை தொலைபேசியில் அழைத்து சமாதானப்படுத்தினார். மேலும், அடுத்த தேர்தலில் நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியும் கொடுத்தார்.
எஸ்.ஆர்.சிவலிங்கம், உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திமுகவின் மூத்த நிர்வாகியும், உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான பொன்முடியிடம் இருந்து அமைச்சர் பதவியும், துணை பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், திமுகவில் உள்ள உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிருப்தியில் இருப்பதாக ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்தது. இந்த பின்னணியில் தான் எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு எம்.பி சீட் ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.
மாநிலங்களவை தேர்த்லில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.சிவலிங்கம், “திமுகவிற்காக உழைப்பவர்களை இந்த கட்சி எப்போதும் கைவிடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காக, ஸ்டாலின் வழியில் நாடாளுமன்றத்தில் என்னுடைய குரல் ஒலிக்கும்” என்று தெரிவித்துள்ளார். Stalin select sr sivalingam as a rajya sabha