ஆசாதி : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

sreenath bashi raveena ravi azadi review may 23

காட்சிகளோடு ஒன்ற வைக்கிறதா?!

சிறைக்கைதிகள் பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளிலும் மிக உச்சத்தில் இருக்கும். ஆனாலும், அந்த அமைப்பில் இருக்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கைதிகள் தப்பித்துச் செல்வது அரிதாக நிகழும். ‘தி ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ போன்ற சில படங்கள் அதனைத் திறம்படக் காட்டியிருக்கின்றன. இதற்கு உதாரணமாகப் பல மேற்கத்திய சீரிஸ்கள், திரைப்படங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சப்ஜெயிலில் இருந்து சில கைதிகள் தப்பிப்பதைக் காட்டியது மலையாளத்தில் வெளியான ‘ஸ்வந்தர்யம் அர்த்தராத்திரியில்’. இப்படம் ‘தக்ஸ்’ என்ற பெயரில் தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டது. sreenath bashi raveena ravi azadi review may 23

கிட்டத்தட்ட அப்படியொரு கதைக்களத்தை நமக்குக் காட்டுவதாகத் தோற்றம் தந்தது ‘ஆசாதி’ திரைப்படம். இதில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸ்ரீநாத் பாசி. இவர் ‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ படத்தில் நடித்தவர். அதன் வெற்றியை மனதில் கொண்டு இது தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.

சாகர் எழுத்தாக்கம் செய்திருக்கும் இப்படத்தைப் புதுமுக இயக்குனர் ஜோ ஜார்ஜ் இயக்கியிருக்கிறார்.

வாணி விஸ்வநாத், லால், ரவீனா ரவி, சைஜு குரூப், மாலா பார்வதி, டி.ஜி.ரவி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘ஆசாதி’?

தப்பிக்கும் கைதி!

அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் மகனை, அவர்களது வீட்டில் வைத்து வெட்டிக் கொன்ற வழக்கில் கோட்டயம் சிறையில் இருக்கிறார் கங்கா (ரவீனா ரவி). அவரது தந்தை சிவன் (லால்), அதே கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து வருபவர்.

கங்கா செய்த குற்றத்திற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதே அதற்குக் காரணம்.

சிறை வளாகத்திலேயே சிவன் மற்றும் கங்காவின் கணவர் ரகுவைக் கொல்லச் சதி செய்கிறது பாதிக்கப்பட்ட தரப்பு.

சில மாதங்கள் கழித்து, பிரசவத்திற்காக ஒரு மருத்துவமனைக்குக் கங்காவைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது, கங்காவுக்கு உறவினர் என்று யாருமில்லாத காரணத்தால், அவருடைய அறையில் இருக்கும் இன்னொரு பெண் கைதியை அனுப்பி வைக்கிறது சிறை நிர்வாகம்.

அரசு மருத்துவமனையில் கங்கா அனுமதிக்கப்படுகிறார். அவரை எப்படியாவது போலீஸ் பாதுகாப்பில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வர வேண்டுமென்று துடிக்கின்றனர் சிவன் மற்றும் மருமகன் ரகு (ஸ்ரீநாத் பாசி).

அதற்காக, மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாப்பனை நாடுகின்றனர். அவர் மூலமாக, அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு நர்ஸ், பிரசவத்திற்குத் தங்களது குடும்பத்து பெண்களை அழைத்து வந்த உறவினர்கள் இருவரைப் பிடிக்கின்றனர்.

அவர்கள் மூலமாக, கங்காவைப் பிரசவத்திற்குப் பின்னர் வெளியே அழைத்து வருவதுதான் ரகுவின் திட்டம். அது பிசகில்லாமல் நிகழ்கிற நேரத்தில் பாப்பன் குட்டையைக் குழப்புகிறார்.

கங்காவுடன் இருக்கிற பெண்ணிடம், ‘தங்களுக்கு உதவி செய்ய முடியுமா’ என்று கேட்கிறார். உடனே, அவர் அதனை போலீசாரிடம் சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கும்? போலீசார் ’யார் அந்த நபர்கள்’ என்று கண்டறியத் தொடங்குவார்கள்.

இந்த விஷயத்தில் சிரத்தை காட்ட வேண்டுமா, வேண்டாமா எனத் தயங்கும் சிறைத்துறை அதிகாரி, தனக்குப் பழக்கமான ஒரு போலீஸ் அதிகாரியான ராணியை (வாணி விஸ்வநாத்) மருத்துவமனைக்கு அனுப்புகிறார்.

அவரது விசாரணை அடுத்தடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட முயன்றவர்களைக் கண்டறிகிறது. ரகுவையும் கைது செய்கிறது.

ஆனாலும், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ரகுவை நிறுத்தாமல் அப்படியே விட்டுவிடுகிறார் ராணி. அதன்பிறகும், மருத்துவமனை வளாகத்தை விட்டுச் செல்ல மாட்டேன் என்றிருக்கிறார் ரகு.

அப்போது, ‘முடிஞ்சா உன்னால உன் பொண்டாட்டி கங்காவை கூட்டிட்டு போ’ என்று சவால் விடுகிறார் ராணி. ‘கண்டிப்பா கூட்டிட்டு போவேன்’ என்கிறார் ரகு.

அதன்பிறகு என்ன நடந்தது? கைதியால் போலீஸ் பாதுகாப்பை மீறித் தப்பிக்க முடிந்ததா என்பதே ‘ஆசாதி’யின் மீதிக்கதை.

ஒரு கைதியை போலீஸ் பாதுகாப்பில் இருந்து விடுவிப்பது இயலாத காரியம். கங்கா கொலை செய்த நபர் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர்கள் தரப்பில் சில ரௌடிகள் களமிறக்கப்படுகின்றனர். சிவனையும் ரகுவையும் கொல்லத் தயார் நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

மருத்துவமனைக்குள் போலீசார், வெளியே ரவுடிகள், இவர்களை மீறி ரகுவால் வெற்றி பெற முடிந்ததா என்பதை ‘த்ரில்’ உடன் தந்திருக்கிறது ‘ஆசாதி’.

ஒன்ற வைக்கும் காட்சிகள்!

இதில் நாயகனாக ஸ்ரீநாத் பாசி நடித்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதனாக, அதேநேரத்தில் எதையும் செய்யத் தயாராக இருக்கிற துணிச்சல் கொண்ட பாத்திரம். அதனைத் திறம்படக் கையாண்டிருக்கிறார்.

லாலுக்கு இதில் முரட்டுத்தனத்தையும் பாசத்தையும் ஒருங்கே காட்டுகிற பாத்திரம். வழக்கம்போல அவர் திரையில் தோன்றியிருக்கிறார்.

வாணி விஸ்வநாத், இதில் ராணி எனும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிகார தோரணையும் மிடுக்குமாகத் தான் வரும் காட்சிகளில் கலக்குகிறார்.

வாய் பேச இயலாத பெண்ணாக நடித்திருக்கிறார் ரவீனா ரவி. மொத்தக் கதையும் அவரது பாத்திரத்தைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் மாலா பார்வதி, டி.ஜி.ரவி உட்படப் பலர் உண்டு. ஆனால், சைஜு குரூப் நடித்திருக்கிற பாத்திரம் இக்கதைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் வந்து போயிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், சனீஷ் ஸ்டேன்லியின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமும் இறுக்கமான சூழலொன்றைக் காட்டுவதாக இருக்குமாறு மெனக்கெட்டுகிறார்.

உள்ளடக்கம் செறிவுற அமைந்திருப்பதாக உணர வைக்கிறது சஹஸ் பாலாவின் தயாரிப்பு வடிவமைப்பு.

’அடுத்தது என்ன’ என்ற கேள்வியோடு நம்மைக் கொஞ்சமும் சிந்திக்கவிடாமல் திரைக்கதையோடு ஒன்ற வைக்கிறார் படத்தொகுப்பாளர் நௌபால் அப்துல்லா.

வருண் உன்னி இதற்கு இசையமைத்திருக்கிறார். அவர் தந்திருக்கும் பின்னணி இசையானது, ஒரு சாதாரண காட்சியும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிற வகையில் அமைந்துள்ளது.

ஒலி வடிவமைப்பு, ஸ்டண்ட், காஸ்ட்யூம்கள், மேக்கப், டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல நுட்பங்களை ஒன்றிணைத்து, ஒரு நல்ல படம் பார்க்கிற உணர்வைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஜோ ஜார்ஜ்.

ஒரு காட்சியின் தொடக்கத்தையும் முடிவையும் ’கூர்மையாக’ இருக்குமாறு பார்த்துக் கொண்டிருப்பது ஆகச் சிறப்பு.

இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சாகர் கையாண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவர். அதனால், காட்சியாக்கத்திற்குச் சாத்தியமுள்ள விஷயங்களை மட்டுமே ஸ்கிரிப்டில் வைப்பது என்று கவனமாகச் செயல்பட்டிருக்கிறார்.

ஆனாலும், ‘கிளைமேக்ஸ் ட்விஸ்ட்’ படம் பார்க்கும் ரசிகர்களை ‘பப்பரப்பே’ எனும் முழிக்க வைக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கிற ரசிகரால் அந்த திருப்பங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். அதையும் மீறி நாம் ஆச்சர்யங்களை அடையலாம். அது, எந்தளவுக்குக் கதையுடன் நாம் ஒன்றுகிறோம் என்பதைப் பொறுத்தது. இதில் பல காட்சிகளில் நாம் ஒன்றி விட முடியும் என்பதே இப்படத்தின் வெற்றி.

திரைக்கதை சூத்திரங்கள் அடிப்படையில் ‘ஆசாதி’யை பகுத்துப் பார்த்தால் பல லாஜிக் மீறல்களை நாம் காணக் கூடும். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளுகிற வகையிலான திரையனுபவத்தைத் தருவதே இதன் சிறப்பு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share