மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 5ம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. kollywood tribute na muthukumar 50th birthday
தமிழ் திரையுலகில், தனது பாடல் எழுத்துக்களால் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக திடீரென காலமானார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் நா.முத்துகுமார் Welfare Core கமிட்டி மற்றும் ACTC நிறுவனம் இணைந்து, அவரது 50வது பிறந்தநாளில் தமிழ் திரையுலக பிரபலங்களோடு மாபெரும் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்
தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும் ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது.

வீசும் காற்று முழுக்க தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும் பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் விழாவை, வரும் ஜூலை 5ஆம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக நடத்த ACTC நிறுவனம் பெருமைக் கொள்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தில் நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
