ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும், லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் மனதை வென்றுவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். rishab pant get huge applauce against rcb jitesh
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோ வாஜ்பாயி மைதானத்தில் நேற்று (மே 27) இரவு நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்கள் குவித்து அசத்தினார். சதமடித்ததும் அவர் மைதானத்தில் அடித்த அந்தர் பல்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து 228 என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் அடித்தால் ஆர்.சி.பி. வெற்றி என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சாதமாகவே இருந்தது.
இந்த நிலையில் 17வது ஓவரை லக்னோ அணியின் சர்ச்சைக்குரிய பவுலர் திக்வேஷ் ரதி வீசினார்.
முதல் பந்தை 49 ரன்களில் இருந்த ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா எதிர்கொண்டார். அந்த பந்தை ரிவர்ஷ் ஸ்வீப் செய்ய, அது பதோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால் மூன்றாவது நடுவர் அதனை நோபாலாக அறிவிக்க இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார் ஜிதேஷ். தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட ப்ரீ ஹிட் பந்தில் சூப்பர் சிக்ஸ் அடித்து தனது முதல் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதே ஓவரின் கடைசி பந்தில் நான் ஸ்ட்ரைக்கில் இருந்தார் ஜிதேஷ். அப்போது பந்துவீச ஓடிவந்த திக்வேஷ், பந்தை வீசாமால், கிரீஸை விட்டு வெளியேறிய ஜிதேஷை ரன் அவுட் செய்தார்.

அதற்கு மூன்றாவது நடுவரும் அவுட் என அறிவிக்க வந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அப்பீலை வாபஸ் பெற்றார். இதனால் 57 ரன்களில் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார்.
சரியான நேரத்தில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்திய பண்ட்டை ஜிதேஷ் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து ஆட்டத்தில் ஆர்.சி.பி வென்றாலும், எங்கள் மனதை வென்றது ரிஷப் பண்ட் என சமூகவலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.
ஒருவேளை அப்பீலை வாபஸ் வாங்காமல் இருந்து, பெங்களூரு அணி தோல்வியை தழுவியிருந்தால், ரிஷப் பண்ட் தான் ஆட்டநாயகன் விருது வென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.