மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), 2026-27 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டு, பள்ளிக் கல்வி முறையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மற்றும் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
6ஆம் வகுப்பு முதல் மூன்றாம் மொழி கட்டாயம்
புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, 6ஆம் வகுப்பு முதல் “மூன்றாம் மொழி” (ஆர்3) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகளை கற்றிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், இனி மூன்று மொழிகள் கற்றல் கட்டாயமாகிறது.
மேலும், இந்த மூன்றாம் மொழி திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2031ஆம் ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
9, 10ஆம் வகுப்பில் தொழில்வியல் பாடம் அவசியம்
புதிய பாடத்திட்டத்தின் மற்றொரு முக்கிய மாற்றமாக, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்வியல் (வொக்கேஷனல் எஜுகேஷன்) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தொழில் சார்ந்த திறன்கள், நடைமுறை அறிவு, வேலைவாய்ப்பு நோக்கில் திறன் மேம்பாடு போன்ற அம்சங்கள் பள்ளி நிலையிலேயே கற்பிக்கப்பட உள்ளன.
மேலும் சேர்க்கப்பட்ட பாடங்கள்
இதோடு, புதிய பாடத்திட்டத்தில் கலைக் கல்வி, உடற்கல்வி, கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்களும் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பாடங்கள் முதற்கட்டமாக உள்துறை மதிப்பீடு முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பொதுத்தேர்வுகளிலும் இடம்பெறும் திட்டம் உள்ளது.
கல்வி முறையில் பெரிய மாற்றம்
இந்த மாற்றங்கள் அனைத்தும், rote learning குறைத்தல், திறன் அடிப்படையிலான கற்றல், பல்மொழித் திறன் வளர்ச்சி என கல்வி முறையை மாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டம், மொழி கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை முன்னிறுத்தும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 6ம் வகுப்பு முதல் மூன்றாம் மொழி மற்றும் மேல்நிலை வகுப்புகளில் தொழில்வியல் கல்வி கட்டாயப்படுத்தப்படுவது, மாணவர்களின் எதிர்கால திறன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
