தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குக்கான 234 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞரால் சான்றொப்பம் இடப்பட்டவை என்றும் கூறி அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகார்களின் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கோபி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
