அண்ணாமலையை முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டு செல்லூர் ராஜு பேசியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரையில் செல்லூர் ராஜுவை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய செல்லூர் ராஜு, “கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சிங்கமாக எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் அண்ணாமலை. முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை” என்று கூறினார்.
செல்லூர் ராஜுவின் இந்தக் கருத்துக்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், “செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போனது. தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜுவின் வார்த்தைக்கு மதுரை மேற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
