வாராக் கடன்களைக் கையாள்வதற்கான புதிய முறையான, எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு (ECL) கட்டமைப்பைத் தாமதப்படுத்தப் போவதில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் 2027 ஏப்ரல் 1 முதல் வருகிறது. தற்போது, ஒரு கடன் வாராக்கடனாக (Bank Loans) மாறத் தொடங்கிய பின்னரே வங்கிகள் பணத்தை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் புதிய முறையின் கீழ், வங்கிகள் ஏற்படக்கூடிய இழப்புகளை முன்கூட்டியே மதிப்பிட்டு, முன்னதாகவே பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.
வங்கிகளை அதிக எச்சரிக்கையுடனும், இடர்பாடுகளுக்குச் சிறப்பாகத் தயாராகவும் வைப்பதும் இதன் நோக்கம் ஆகும். புதிய விதிகளின் கீழ், சில கடன்கள் சில்லறைக் கடன்களாகக் கருதப்பட்டு குறைந்த இடர்பாடு கொண்டவையாகக் கருதப்படும். இந்தக் கடன்களுக்கு 75% என்ற குறைந்த இடர் எடை (Risk Weight) விதிக்கப்படும். அதாவது வங்கிகள் அவற்றுக்கு எதிராக அதிக மூலதனத்தை வைத்திருக்கத் தேவையில்லை.
எந்தெந்தக் கடன்கள் தகுதி பெறும்?
இதற்குத் தகுதி பெற, கடன் தனிநபர்களுக்கோ அல்லது ரூ. 500 கோடி வரையிலான வருவாய் கொண்ட சிறு வணிகங்களுக்கோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன் அல்லது தவணைக் கடன் போன்ற ஒரு வழக்கமான கடனாக இருக்க வேண்டும். மேலும் ஒரு கடனாளிக்கு ரூ. 10 கோடியைத் தாண்டக்கூடாது. சரியான நேரத்தில் முழுமையாகச் செலுத்தப்பட்ட கிரெடிட் கார்டு நிலுவைகளும் அதிக சாதகமாகக் கருதப்படும்.
அதே நேரத்தில், சில வகையான கடன்களுக்கு இந்தச் சலுகை கிடைக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. பெரும்பாலான தனிநபர் கடன்கள், செலுத்தப்படாத கிரெடிட் கார்டு நிலுவைகள், மற்றும் பங்குச் சந்தைகள், டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான கடன்கள் அதிக அபாயகரமானவையாகக் கருதப்படும். இவற்றுக்காக வங்கிகள் அதிக மூலதனத்தை ஒதுக்க வேண்டியிருக்கும்.
அபாய நிலைகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பான சில்லறைக் கடன்களுக்கு 75% அபாய எடை இருக்கும். தகுதி பெறாத மற்ற கடன்களுக்கு பொதுவாக 100% அபாய எடை இருக்கும். பிணையற்ற தனிநபர் கடன்கள் மற்றும் சுழல் கிரெடிட் கார்டு நிலுவைகள் போன்ற அதிக அபாயகரமான கடன்களுக்கு, தொடர்ந்து 125% என்ற உயர் அபாய எடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
