ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி தேமுதிகவை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக களம் காண்கிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரங்களின் போது தேமுதிக கடுமையாக விமர்சித்து வருகிறார். மயிலாப்பூரில் மேற்கொண்ட தனது முதல் பிரச்சாரத்தின் போது, அங்கீகாரம் இல்லாத கட்சி என்று தேமுதிகவை குறிப்பிட்டு இருந்தார்.
அதைத்தொடர்ந்து அரை சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 சீட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்த நிலையில், எங்களுக்கு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று பிரேமலதா விஜயகாந்த் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை கோயிலில் இன்று (ஏப்ரல் 5) சாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பிரேமலதா பேசுகையில், ‘அரை சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி என்று அவர் விமர்சிக்கிறார். அவருக்கு ஏன் வயிறு எரிகிறது. கருகும் ஸ்மெல் இன்று தமிழ்நாடு முழுவதும் வீசுகிறது.
2011 முதல் 2026 வரை யார் கூட்டணியில் நாங்கள் இருந்தோம். ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு இது அழகு அல்ல. கண்டிக்கத்தக்க கூடியது.
அவர் 2024 தேர்தலின் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இப்போது அண்ணாமலையார் கோயிலிலிருந்து வெளியிடுகிறேன்.
இதை இதுவரைக்கும் நான் காட்டியதே கிடையாது. நான் எம். பி சீட் கொடுக்கிறேன் என்று எப்போது சொன்னேன் என்கிறார்.
இதோ பாருங்கள், 2024 மக்களவைத் தேர்தலில் ஐந்து எம் பி சீட், ஒரு எம் பி சீட் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் போட்டு நானும் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு இருக்கிறோம்” என்று கூறி அந்த ஒப்பந்தத்தை காட்டினார்.
0.5 சதவீதக் கட்சி என்றால் ஏன் 5 சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீர்கள்? என எடப்பாடிக்கு கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், ‘2024ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 2025ல் எங்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அவர் வருடத்தை போட்டு கொடுக்கவில்லை. அப்போது வருடத்தை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்திலிருந்தே வருடம் போடுவதில்லை. நம்பிக்கை முக்கியம், வார்த்தை முக்கியம் என்றார். அந்த வார்த்தையை நாங்கள் நம்பினோம். எங்களுக்கும் கீழ்தரமாக பேச தெரியும். அனால் கேப்டன் சொல்லி கொடுத்தது போல நாங்கள் மரியாதையாக இருக்கிறோம்” என்றார்.
