விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்தை வேட்பாளராக அறிமுகப்படுத்திய போது எழுந்து நிற்காதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் 9 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும், கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிமுகம் செய்தார். அப்போது தொகுதி வாரியாக வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய நிலையில், அனைத்து வேட்பாளர்களும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விருதாச்சலம் தொகுதியில் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார் என திருமாவளவன் அறிவித்தபோது, பிரேமலதா எழுந்து நிற்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தார். ஆனால், அதே கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்த் பெயரை அறிவித்தபோது, அவர் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்.
இந்நிலையில், திருமாவளவன் அறிமுகப்படுத்தியபோது பிரேமலதா விஜயகாந்த் எழுந்து நிற்காதது பெரும் பேசுபொருளாகி உள்ளது. அவரது இந்த நடவடிக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன்,”விஜயகாந்துடன் அண்ணன்-தம்பி உறவு போலவும், நல்ல நட்புடன் இருந்த திருமாவளவனை “தம்பி” என்று விஜயகாந்த் அழைப்பார். இப்படி இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு இருந்து வந்த நிலையில், பிரேமலதா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது நல்ல தலைவருக்கு அழகல்ல என்றும், இது அரசியல் நாகரீகமும் அல்ல என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.மற்ற வேட்பாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நிலையில், பிரேமலதா விஜயகாந்தும் எழுந்து வணக்கம் தெரிவித்திருந்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்காது” என தெரிவித்துள்ளார்.
