ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூன் 25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய சுகாதார திட்டத்தின்கீழ், மலைப் பிரதேச கிராம மக்களுக்கும், முதன்மை சுகாதார மையங்களுக்கும் இடையே பாலமாக இருந்து சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துபவர்கள் ஆஷா பணியாளர்கள்.

குழந்தை பிறப்பு விகிதக் குறியீடு, தாய் சேய் நலனைக் குறிக்கும் குறியீடு ஆகியவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு ஆஷா பணியாளர்கள் காரணமாவார்கள்.
ஆஷா பணியாளர்கள் ‘செயல்பாட்டாளர்கள் என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 24 மணிநேரமும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள்.
இருப்பினும், பணியாளர்கள் என்ற அந்தஸ்து இல்லாமல் “செயல்பாட்டாளர்கள்’ என்ற முறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 2,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும் என மாதம் 3,500 ரூபாயினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கினாலும், மத்திய, மாநில அரசின் சுகாதாரத் திட்டங்களைத் தான் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை என்று ஆஷா பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2,650 ஆஷா பணியாளர்கள் உள்ளதாகவும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதன் அடிப்படையில் தங்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன். மாதம் வெறும் 3,500 ரூபாய் என்பது அவர்களுடைய போக்குவரத்திற்குகூட போதுமானதாக இருக்காது.
மேலும், மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்களுக்கு மாநில அரசின் சார்பில் எந்தத் தொகையும் வழங்கப்படாதது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
ஆஷா பணியாளர்களின் உழைப்பினையும், அவர்களது தரப்பில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை அழைத்துப் பேசி, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்.
தற்போது இருக்கும் அவர்களுடைய மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மேற்குவங்கம்: சரக்கு ரயில்கள் விபத்து!