இந்தியா மீதான வரிகளை டிரம்ப் இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து, மறுநாளே (ஆகஸ்ட் 7) ரஷ்ய அதிபர் புதினை மாஸ்கோவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவிடம் தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தண்டனை என்ற பெயரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 6ஆம் தேதி கையெழுத்திட்டார். இதன் மூலம் மொத்த இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
இந்த புதிய வரி நடவடிக்கை இரண்டு கட்டங்களாக முழுமையாக அமலுக்கு வரும் என்றும், முதல் 25 சதவீத உயர்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதியும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இரண்டாவது வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா ஒப்புக் கொள்ளாவிட்டால் வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்கா – இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ”வரிகளை உயர்த்தியது நியாயமற்றது. இந்தியா தனது பொருளாதார இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், ”இந்தியா வெளிப்புற அழுத்தங்களுக்கு அடிபணியாது” என பிரதமர் மோடி அழுத்தமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப் வரியை 50 சதவிதமாக உயர்த்திய மறுநாளே (ஆகஸ்ட் 7) ரஷ்ய அதிபர் புதினை, அந்நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது இரு நாடுகளும் “மூலோபாய கூட்டாண்மை”க்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தின.
மேலும் சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்பதை தோவல் உறுதிப்படுத்தினார்.
