தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 3 ம்தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தானில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மூன்றாம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ராஜஸ்தானின் சிகார் நகரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் பேரில் ராஜஸ்தான் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, சிகார், ஜுன்ஜுனு மற்றும் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் ஆகிய இடங்களைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளது.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் சமூக வலைதளங்கள் வாயிலாக கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாள் வெளியாகியுள்ளது. அந்த வினாத்தாளில் இடம்பெற்ற 135 கேள்விகள், நீட் வினாத்தாளுடன் ஒத்துப்போகின்றன. இதில் உயிரியல், தாவரவியல் மற்றும் வேதியியல் பாடங்களில் மட்டும் தலா 45 கேள்விகள் நீட் வினாத்தாளில் அப்படியே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாதிரி வினாத்தாள் ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அந்த மாணவர் சிகார் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்திலிருந்து மாதிரி வினாத்தாளை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மருத்துவ கனவுகளுடன் தேர்வு எழுதிய மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
