மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாசின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
பாமகவில் உட்கட்சி பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நேற்று முறையிடப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள் முருகன் அமர்வில் இன்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
தங்கள் வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்.
